- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
- செவிலிபாற் சேர்த்தனை அவளோ
- எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
- என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
- மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
- வந்தெனைப் பார்த்திலை அந்தோ
- தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
- தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
- தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
- தாய்கையில் கொடுத்தனை அவளோ
- வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
- மாயமே புரிந்திருக் கின்றாள்
- கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
- கேட்பதற் கடைந்திலன் அந்தோ
- உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
- உற்றிலை பெற்றவர்க் கழகோ.
- தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- தாயவள் நான்தனித் துணர்ந்து
- தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
- சூதையே நினைத்திருக் கின்றாள்
- ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
- உளந்தளர் வுற்றனன் நீயும்
- ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
- எந்தைநின் திருவருட் கழகோ.
- அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
- நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
- நீலியோ தன்புடை ஆடும்
- தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
- தனித்தனி அவர்அவர் எடுத்தே
- கத்தவெம் பயமே காட்டினர் நானும்
- கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
- வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
- மகள்கையில் கொடுத்தனன் எனைத்தான்
- ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
- என்செய்வேன் என்னையே உணர்ந்து
- தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
- தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
- ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
- ஈன்றவர் அறிவரே எந்தாய்.
- வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
- மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
- மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
- வந்தெனை எடுத்திலார் அவரும்
- இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
- என்செய்வேன் என்னுடை அருமை
- நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
- நீயும்இங் கறிந்திலை யேயோ.
- தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
- சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
- கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
- காதுறக் கேட்டிருக் கின்றாள்
- செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
- சிரித்திருக் கின்றனர் அந்தோ
- இம்மியே எனினும் ஈந்திடார் போல
- இருப்பதோ நீயும்எந் தாயே.
- துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
- தொட்டிலே பலஇருந் திடவும்
- திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
- சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
- பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
- பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
- கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
- கண்டிடில் சகிக்குமோ நினக்கே.
- காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
- கனிவிலாள் காமமா திகளாம்
- பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
- பயம்புரி வித்தனள் பலகால்
- தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
- திருமதி எனநினைந் தறியாள்
- சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
- தந்தது சாலும்எந் தாயே.
- ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
- நாயகி யுடன்எழுந் தருளி
- ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
- இன்னமு தனைத்தையும் அருத்தி
- ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
- உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
- வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
- மாமணி மன்றில்எந் தாயே.