- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
- வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
- தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
- திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
- ஊன்பிறந்த உடல்ஓம்பி அவமே வாழ்நாள்
- ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
- ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
- மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
- உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
- ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
- பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
- புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
- ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
- யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
- வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
- மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
- சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
- நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
- நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
- கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
- குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
- பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்
- புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
- கல்லாத பாவிஎன்று கைவிட் டாயோ
- கருணைஉரு வாகியசெங் கரும்மே மேரு
- வில்லான்தன் செல்வமே தணிகை மேவும்
- மெய்ஞ்ஞான ஒளியேஇவ் வினையேன் துன்பம்
- எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
- திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
- வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
- தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
- சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
- படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
- பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
- இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
- வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
- பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
- பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
- பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
- போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
- என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
- மூடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
- இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
- ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
- மலைஒருபால் வாங்கியசெவ் வண்ண மேனி
- வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
- புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
- புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வஞ்சமட மாதரார் போகம் என்னும்
- மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
- கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
- காணாத செங்கனியில் கனிந்த தேனே
- தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
- தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
- எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.