- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே
- அழுது விழிகள் நீர்துளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன்
- பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும்
- உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
- உடையாய் திருஅம் பலத்தாடல் ஒருவா ஒருவா உலவாத
- கொடையாய் எனநான் நின்றனையே கூவிக் கூவி அயர்கின்றேன்
- தடையா யினதீர்த் தருளாதே தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
- கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் மதமோ கருணைக் கருத்தினுக்கே.
- கருணைக் கருத்து மலர்ந்தெனது கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்
- தருணத் தருளா விடில்அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வதுதான்
- அருணச் சுடரே நின்னருளுக் கழகோ அழகென் றிருப்பாயேல்
- தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236 சிரிப்பார் நானும் திகைப்பேனே.
- திகைப்பார் திகைக்க நான்சிறிதும் திகையேன் எனநின் திருவடிக்கே
- வகைப்பா மாலை சூட்டுகின்றேன் மற்றொன் றறியேன் சிறியேற்குத்
- தகைப்பா ரிடைஇத் தருணத்தே தாராய் எனிலோ பிறரெல்லாம்
- நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் திருத்தல் அழகோ நாயகனே.
- நாயிற் கடையேன் கலக்கமெலாம் தவிர்த்து நினது நல்லருளை
- ஈயிற் கருணைப் பெருங்கடலே என்னே கெடுவ தியற்கையிலே
- தாயிற் பெரிதும்237 தயவுடையான் குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர்
- சேயிற் கருதி அணைத்தான்என் றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.
- தெரிந்த பெரியர்க் கருள்புரிதல் சிறப்பென் றுரைத்த தெய்வமறை
- திரிந்த சிறியர்க் கருள்புரிதல் சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே
- புரிந்தம் மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே
- விரிந்த மனத்துச் சிறியேனுக் கிரங்கி அருளல் வேண்டாவோ.
- வேண்டார் உளரோ நின்னருளை மேலோ ரன்றிக் கீழோரும்
- ஈண்டார் வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான்வேண்டல்
- தூண்டா விளக்கே திருப்பொதுவிற் சோதி மணியே ஆறொடுமூன்
- றாண்டா வதிலே முன்னென்னை ஆண்டாய் கருணை அளித்தருளே.
- அருளே வடிவாம் அரசேநீ அருளா விடில்இவ் வடியேனுக்
- கிருளே தொலைய அருளளிப்பார் எவரே எல்லாம் வல்லோய்நின்
- பொருளேய் வடிவிற் கலைஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
- தெருளே யுறஎத் தலைவருக்குஞ் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.
- திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
- புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய்உரைத்தே
- இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
- அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
- எல்லாம் வகுத்தாய் எனக்கருளில் யாரே தடுப்பார் எல்லாஞ்செய்
- வல்லான் வகுத்த வண்ணம்என மகிழ்வார் என்கண் மணியேஎன்
- சொல்லா னவையும் அணிந்துகொண்ட துரையே சோதித் திருப்பொதுவில்
- நல்லாய் கருணை நடத்தரசே தருணம் இதுநீ நயந்தருளே.
- நயந்த கருணை நடத்தரசே ஞான அமுதே நல்லோர்கள்
- வியந்த மணியே மெய்யறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
- கயந்த மனத்தேன் எனினும்மிகக் கலங்கி நரகக் கடுங்கடையில்
- பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்தருளே.
- பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் பாவி மனத்தால் பட்டதுயர்
- தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
- சேர்த்தார்238 உலகில் இந்நாளில் சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
- ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ கருணைக் கழகிங் கெந்தாயே.
- தாயே எனைத்தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
- பேயேன் செய்த பெருங்குற்றம் பொறுத்தாட் கொண்ட பெரியோனே
- நீயே இந்நாள் முகமறியார் நிலையில் இருந்தால் நீடுலகில்
- நாயே அனையேன் எவர்துணைஎன் றெங்கே புகுவேன் நவிலாயே.
- ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
- பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
- நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
- காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
- கருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
- தெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே
- இருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்
- தருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.
- வருவாய் என்கண் மணிநீஎன் மனத்திற் குறித்த வண்ணமெலாம்
- தருவாய் தருணம் இதுவேமெய்த் தலைவா ஞான சபாபதியே
- உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
- இருவாய் அலநின் திருவடிப்பாட் டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.
- தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
- வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
- ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
- தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
- அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
- குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
- நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
- பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
- சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
- அகமே விளங்கத் திருஅருளா ரமுதம் அளித்தே அணைத்தருளி
- முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல்
- சகமேல்240 இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.
- தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை
- எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
- சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால்
- வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே.
- 235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
- 236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
- 238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 239. ஒருவா - ச. மு. க.
- 240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.