- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 - திருச்சிற்றம்பலம்
 - தேடிய துண்டு நினதுரு வுண்மை
 - தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
 - ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
 - உரைத்ததும் உவந்ததும் உண்டோ
 - ஆடிய பாதம் அறியநான் அறியேன்
 - அம்பலத் தரும்பெருஞ் சோதி
 - கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
 - கூறவுங் கூசும்என் நாவே.
 - மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு
 - வள்ளலே நின்திரு வரவுக்
 - கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்
 - இறையும்வே றெண்ணிய துண்டோ
 - நடம்புரி பாதம் அறியநான் அறியேன்
 - நான்செயும் வகையினி நன்றே
 - திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்
 - சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.
 - நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
 - நின்றதே அன்றிநின் அளவில்
 - நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
 - நோக்கிய திறையும் இங்குண்டோ
 - தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
 - துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
 - தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
 - தெளிவித்தல் நின்கடன் சிவனே.
 - ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
 - என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
 - ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
 - அன்றிவே றெண்ணிய துண்டோ
 - ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
 - உறுகணிங் காற்றலேன் சிறிதும்
 - தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
 - நன்றருள் புரிவதுன் கடனே.
 - மாயையாற் கலங்கி வருந்திய போதும்
 - வள்ளல்உன் தன்னையே மதித்துன்
 - சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
 - தலைவவே245 றெண்ணிய துண்டோ
 - தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
 - துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
 - நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
 - நன்றருள் புரிவதுன் கடனே.
 - வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
 - மன்னிய உண்மை ஒன்றென்றே
 - எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
 - திறையும்வே றெண்ணிய துண்டோ
 - அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
 - அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
 - திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
 - தெளிவித்துக் காப்பதுன் கடனே.
 - ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
 - உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
 - வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
 - மன்றினை மறந்ததிங் குண்டோ
 - ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
 - ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
 - பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
 - பரிந்தருள் புரிவதுன் கடனே.
 - உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
 - ஒருசிவ மயமென உணர்ந்தேன்
 - கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
 - கருத்தயல் கருதிய துண்டோ
 - வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
 - மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
 - தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
 - தெளிவித்தல் நின்கடன் சிவனே.
 - எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
 - இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
 - சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
 - தனித்துவே றெண்ணிய துண்டோ
 - செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
 - சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
 - இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
 - தியற்றுவ துன்கடன் எந்தாய்.
 - அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
 - அடுத்திடும் புறப்புறம் நான்கில்
 - இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
 - இறையும்இங் கெண்ணிய துண்டோ
 - உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
 - உறுகணிங் கினிச்சிறி துந்தான்
 - இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
 - கென்னைஆண் டருள்வ துன்கடனே.
 - 244. சாயையாற் 245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.