- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
- பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
- கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
- கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
- செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
- திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
- அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
- அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
- காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
- மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
- விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
- செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
- தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
- மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
- பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
- இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
- இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
- உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
- உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
- திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
- பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
- பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
- கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
- கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
- மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
- மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
- மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
- விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
- முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
- என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
- என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
- பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
- பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
- கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
- அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
- தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
- சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
- நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
- நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
- அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
- அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
- கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
- கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
- பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
- புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
- இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
- றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
- இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
- இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
- மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
- வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
- குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
- குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
- பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
- புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
- 252. கலக்குகின்ற - ச. மு. க. பதிப்பு.
- 253. மிசையின் - ச. மு. க. பதிப்பு.