- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை
- எண்ணினும் ஐயவோ மயங்கிப்
- பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்
- பரதவிப் பதைஅறிந் திலையோ
- தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
- தனிநடம் புரிதனித் தலைவா
- கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்
- பேசினும் நெய்விடுந் தீப்போல்
- எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ
- எங்கணும் கண்ணுடை எந்தாய்
- புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்
- புண்ணியா என்னுயிர்த் துணைவா
- கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்
- மெய்யனே ஐயனே எனக்கு
- மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்
- வல்லனே நல்லனே அருட்செங்
- கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்
- குணத்தனே இனிச்சகிப் பறியேன்
- காலையே தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத
- பண்பனே திருச்சிற்றம் பலத்தே
- தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்
- தூயனே நேயனே பிரமன்
- விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே
- விளங்குறக் காட்டிய விமலா
- கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- தனித்துணை எனும்என் தந்தையே தாயே
- தலைவனே சிற்சபை தனிலே
- இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணுள்மா மணியே
- அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
- சோதியுட் சோதியே அழியா
- இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
- ஈன்றநல் தந்தையே தாயே
- அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
- தென்னைஆட் கொண்டெனை உவந்தே
- ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
- ஒருவனே என்னுயிர்த் துணைவா
- வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
- விளங்கிய விமலனே ஞான
- போதகம் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்
- திசைந்தபே ரின்பமே யான்தான்
- பண்ணிய தவமே தவத்துறும் பலனே
- பலத்தினால் கிடைத்தஎன் பதியே
- தண்ணிய மதியே மதிமுடி அரசே
- தனித்தசிற் சபைநடத் தமுதே
- புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே
- மந்திர மேஒளிர் மணியே
- நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த
- நேயனே தாயனை யவனே
- பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்
- பரமனே பரமசிற் சுகந்தான்
- புலப்படத் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
- கற்பகத் தீஞ்சுவைக் கனியே
- வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
- விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
- ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
- ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
- புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- 255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.