- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
- பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
- நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
- சிவனே கதவைத் திற.
- இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
- நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
- கோவே எனது குருவே எனையாண்ட
- தேவே கதவைத் திற.
- சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
- நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
- பவனே பரனே பராபரனே எங்கள்
- சிவனே கதவைத் திற.
- அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
- மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
- தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
- சிவனே கதவைத் திற.
- வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
- ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
- திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
- சிறப்பா கதவைத் திற.
- எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
- நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
- நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
- செல்வா கதவைத் திற.
- ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
- வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
- ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
- தேவா கதவைத் திற.
- ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
- ஞான அமுதமது நானருந்த - ஞான
- உருவே உணர்வே ஒளியே வெளியே
- திருவே கதவைத் திற.
- திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
- வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
- வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
- தேனே கதவைத் திற.
- சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
- மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
- ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
- தேகா கதவைத் திற.