- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
- திகழ்தனித் தந்தையே நின்பால்
- சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
- செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
- யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- போரிட முடியா தினித்துய ரொடுநான்
- பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
- போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
- புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
- யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
- திருவுளத் தடைத்திடு வாயேல்
- ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
- என்னுயிர்த் தந்தைநீ அலையோ.
- தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ
- தமியனேன் தளர்ந்துளங் கலங்கி
- எந்தையே குருவே இறைவனே முறையோ
- என்றுநின் றோலிடு கின்றேன்
- சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல்
- சிறியனேன் என்செய்கேன் ஐயோ
- சந்தையே புகுந்த நாயினில் கடையேன்
- தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரோ.
- யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
- என்பிழை பொறுப்பவர் யாரே
- பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
- பாவியேன் பிழைபொறுத் திலையேல்
- ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
- உடம்பைவைத் துலாவவும் படுமோ
- சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
- தெய்வத்துக் கடாதவன் என்றே.
- அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
- அப்பநீ அடியனேன் தன்னை
- விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
- விடுதியோ விட்டிடு வாயேல்
- உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
- உன்னருள் அடையநான் இங்கே
- படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
- பாடெலாம் நீஅறி யாயோ.
- அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
- அழைத்தனன் அப்பனே என்னை
- எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
- எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
- பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
- பெருந்திறல் சித்திகள் எல்லாம்
- சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
- சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
- களித்தென துடம்பில் புகுந்தனை எனது
- கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
- தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
- சிறப்பினால் கலந்தனை உள்ளம்
- தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
- தடைபடாச் சித்திகள் எல்லாம்
- அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
- அடியன்மேல் வைத்தவா றென்னே.
- என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்
- ஏற்றினை யாவரும் வியப்பப்
- பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்
- பூரண ஞானமும் பொருளும்
- உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்
- உவகையும் உதவினை எனக்கே
- தன்னிகர் இல்லாத் தலைவனே நினது
- தயவைஎன் என்றுசாற் றுவனே.
- சாற்றுவேன் எனது தந்தையே தாயே
- சற்குரு நாதனே என்றே
- போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
- பூரணா எனஉல கெல்லாம்
- தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
- தூயபேர் உதவிக்கு நான்என்
- ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
- அப்பநின் சுதந்தரம் அன்றோ.
- சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
- தூயநல் உடம்பினில் புகுந்தேம்
- இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
- இன்புறக் கலந்தனம் அழியாப்
- பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
- பரிசுபெற் றிடுகபொற் சபையும்
- சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
- தெய்வமே வாழ்கநின் சீரே.
- 257. சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி.