- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
- மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
- இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
- ஒன்றே எனினும் பொறேன்அரு ளாணை உரைத்தனனே.
- தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச்
- சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே
- நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த
- பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே.
- திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
- கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
- உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
- வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
- மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
- தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
- எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
- இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
- வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
- சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
- போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
- சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
- செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
- இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
- எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
- வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
- ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
- வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
- ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
- ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
- என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
- தன்னே ரிலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
- கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
- பொன்னேர் வடிவும் அளித்தென் னுயிரில் புணர்ந்தனனே.
- அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
- எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
- மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
- இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
- வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
- வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
- வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
- வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.