- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
- வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
- காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற
- வாணா நினக்கடிமை வாய்த்து.
- காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
- சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
- சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
- ஏகா நினக்கடிமை ஏற்று.
- மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
- யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
- நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
- தாய்க்குத் தனிஇயற்கை தான்.
- கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
- பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
- தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
- எந்தாய் கருணை இது.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
- அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
- அழியாச்சிற் றம்பலத்தே யான்.
- பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
- போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
- றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
- நாடுகின்றேன் சிற்சபையை நான்.
- எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
- உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
- சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
- குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
- கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
- கண்டான்265 களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
- நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
- வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் அழியா உரம்266 பெற்றேன் - பண்டே
- எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
- தனைஉவந்து கொண்டான் தனை.
- தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
- மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
- குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
- மணவாளன் பாத மலர்.
- திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
- குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
- தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
- மாப்பிள்ளை பாத மலர்.
- என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
- தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
- சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
- மாலைஇட்டான் பாதமலர்.
- 264. ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
- 265. கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
- 266. வரம் - படிவேறுபாடு. ஆ. பா.