- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- ஆனந்த போகமே அமுதே
- மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- மன்னும்என் ஆருயிர்த் துணையே
- துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
- தூயவே தாந்தத்தின் பயனே
- பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
- உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
- ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
- உவந்தர சளிக்கின்ற அரசே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- சோதியுட் சோதியே எனது
- மதிவளர் மருந்தே மந்திர மணியே
- மன்னிய பெருங்குண மலையே
- கதிதரு துரியத் தனிவெளி நடுவே
- கலந்தர சாள்கின்ற களிப்பே
- பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
- செல்வமே என்பெருஞ் சிறப்பே
- நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
- நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
- ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
- திருந்தர சளிக்கின்ற பதியே
- பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- ஒள்ளிய தெள்ளிய ஒளியே
- வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
- மந்திரத் தாற்பெற்ற மணியே
- நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
- நிறைந்தர சாள்கின்ற நிதியே
- பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மெய்யறி வானந்த விளக்கே
- கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
- கதிர்நடு வளர்கின்ற கலையே
- ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
- பால்அர சாள்கின்ற அரசே
- பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- இன்பமே என்னுடை அன்பே
- திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
- திகழுறத் திகழ்கின்ற சிவமே
- மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
- வெளிஅர சாள்கின்ற பதியே
- பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- அரும்பெருஞ் சோதியே எனது
- பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
- புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
- மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
- மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
- நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
- நண்புகொண் டருளிய நண்பே
- வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
- வயங்கிய தனிநிலை வாழ்வே
- பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.