- கொச்சகக் கவிப்பா
- திருச்சிற்றம்பலம்
- அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு
- கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவள
- வண்ணாவோ நற்றணிகை மன்னாவோஎன்றென்றே
- எண்ணாவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே.
- மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத்
- துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி
- தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும்
- என்னப்பா இன்னும் இந்த ஏழைக் கிரங்காயோ.
- காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை
- வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்
- தூய்நின்றே தாளைத்தொழுதாடித் துன்பம்எலாம்
- போய்நின் றடைவேனோ புண்ணியநின் பொன்னருளே.
- பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில்
- வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
- என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே
- அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே.
- வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும்
- என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
- அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
- மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ.