- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
- காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
- தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
- தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
- கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
- குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
- எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
- ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
- விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்
- தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
- சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
- தரித்தானைத் தானேநா னாகி என்றும்
- தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
- எரித்தானை என்உயிருக் கின்பா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
- நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
- தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
- துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
- ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
- உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
- எட்டானை என்னளவில் எட்டி னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்
- துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
- காற்றானை வெளியானைக் கனலா னானைக்
- கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
- தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
- சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
- ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு
- செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்
- ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற
- ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்
- பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்
- பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
- ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
- போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
- செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
- திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
- அயலானை உறவானை அன்பு ளானை
- அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
- இயலானை எழிலானைப் பொழிலா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
- சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
- மேயானைக் கண்காண விளங்கி னானை
- மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
- வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
- வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
- ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்
- தானேதா னானானைத் தமிய னேனைக்
- குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்
- குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
- அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை
- அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்
- இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உடையானை அருட்ஜோதி உருவி னானை
- ஓவானை மூவானை உலவா இன்பக்
- கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
- கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
- அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
- அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
- இடையானை என்னாசை எல்லாந் தந்த
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- 270. சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.