- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
- திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
- ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
- உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
- நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
- நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
- கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
- பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
- தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
- செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
- ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
- ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
- காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
- வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
- துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
- சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
- விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
- விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
- கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
- வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
- ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
- அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
- தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
- சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
- காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
- அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
- வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
- விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
- தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
- சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
- காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
- சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
- அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
- அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
- பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
- பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
- கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
- கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
- ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
- உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
- தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
- தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
- காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
- நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
- ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
- ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
- வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
- வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
- காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
- வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
- தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
- தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
- பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
- புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
- கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.