- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
- ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
- வெட்டியே என்கோ வெட்டியில்276 எனக்கு
- விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
- பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
- பெரியவர் வைத்ததோர் தங்கக்
- கட்டியே என்கோ அம்பலத் தாடும்
- கருணையங் கடவுள்நின் றனையே.
- துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
- அம்மையே அப்பனே என்கோ
- இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
- என்உயிர்க் கின்னமு தென்கோ
- என்பொலா மணியே என்கணே என்கோ
- என்னுயிர் நாதநின் றனையே.
- கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
- கணவனே கணவனே என்கோ
- ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
- ஒருதனிப் பெரியனே என்கோ
- திருத்தனே எனது செல்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே என்கோ
- நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
- நிறைஅருட் சோதிநின் றனையே.
- தாயனே எனது தாதையே ஒருமைத்
- தலைவனே தலைவனே என்கோ
- பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
- பெருந்தகைப் பெரும்பதி என்கோ
- சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
- சித்தெலாம் வல்லசித் தென்கோ
- தூயனே எனது நேயனே என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
- ஆனந்தத் தனிமலர் என்கோ
- கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
- கடையனேன் உடையநெஞ் சகமாம்
- இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
- இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
- துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
- சர்க்கரை அமுதமே என்கோ
- மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
- முகநகைக் கணவனே என்கோ
- போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
- புணர்ந்தஓர் பூவையே என்கோ
- ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
- அம்பலத் தாடிநின் றனையே.
- தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
- தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
- சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
- தனில்உறும் அனுபவம் என்கோ
- ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
- ஓங்கிய ஒருமையே என்கோ
- சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலத்தவ நினையே.
- யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
- ஓங்கிய காட்சியே என்கோ
- ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
- இசைந்தபே ரின்பமே என்கோ
- சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
- சார்ந்தசற் குருமணி என்கோ
- மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
- மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
- இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
- இயற்கையுள் இயற்கையே என்கோ
- வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்
- வயங்கிய வான்பொருள் என்கோ
- திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
- செய்ததோர் சித்தனே என்கோ
- கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
- களித்தளித் தருளிய நினையே.
- 276. கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
- 277. நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.