- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
- தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
- சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
- நல்லான்தன் தாட்கே நயந்து.
- சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
- வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
- காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
- சேமநட ராஜன் தெரிந்து.
- ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்
- வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார
- விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த
- எந்தைநட ராஜன் இசைந்து.
- இன்னுரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திடுக
- என்னுரையும் பொன்னுரைஎன் றேஅணிந்தான் - தன்னுரைக்கு
- நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
- ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
- என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
- தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
- காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
- சாலையிலே வாஎன்றான் தான்.
- என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
- பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
- நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
- வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
- முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
- அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
- பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
- தாரா வரங்களெலாம் தந்து.
- பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
- என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
- வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
- தெல்லாம் திருவருட்சீ ரே.
- பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
- தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
- இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
- மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
- நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றமொன்றும்
- ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
- புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
- எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
- எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
- நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
- உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
- தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
- ஆக்கி அளித்தல்முத லாந்தொழில்ஓர் ஐந்தினையும்
- தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
- எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
- கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.