- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
- எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
- எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
- செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
- திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
- தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
- தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
- ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
- பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
- புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
- எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
- இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
- நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
- நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
- அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
- கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
- காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
- பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
- பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
- உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
- உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
- அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
- செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
- திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
- ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
- ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
- எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
- எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
- அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
- வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
- மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
- புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
- பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
- உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
- துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
- படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
- படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
- ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
- இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
- இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
- எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
- ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
- தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
- சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
- அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
- எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
- எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
- இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
- எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
- உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
- உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
- அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
- செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
- சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
- எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
- பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
- பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
- அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
- மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
- மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
- இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
- திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
- பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
- புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
- அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
- எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
- எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
- கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
- காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
- விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
- விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
- 279. எய்யாத - அறியாத. முதற்பதிப்பு.
- 280. கமை - பொறுமை. முதற்பதிப்பு.