- கலிவிருத்தம்
- பண்: நட்டராகம்
- திருச்சிற்றம்பலம்
- கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
- விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
- தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
- உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
- வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
- அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
- ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
- இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
- உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
- அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
- இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
- உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
- அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
- ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
- நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
- மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
- ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
- கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
- மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
- உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
- அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
- கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
- உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
- அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
- எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
- உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
- பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
- என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
- உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.