- வண்ணக் கலி விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும்
- பவசங்கடம் அறும்இவ்விக பரமும்புகழ் பரவும்
- கவசங்கள்எ னச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
- சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.
- மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
- கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
- மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
- வேல்ஏந்திய முருகாஎன வெண்றணிந் திடிலே.
- தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
- நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
- பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
- சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே.
- துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
- கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
- குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
- மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே.
- தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
- மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
- வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
- ஆறாக்கரப்10 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
- அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
- தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
- எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
- குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே.
- மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
- மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
- சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
- பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
- அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
- மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
- சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
- முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.
- சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமும்ஓர்
- நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
- இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
- கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.
- எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்
- நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்
- பண்ணார்மொழி மலையாள்அருள் பாலாபனி ரண்டு
- கண்ணாஎம தண்ணாஎனக் கனநீறணிந் திடிலே.
- 10. ஆறக்கரம் என்பது ஆறாக்கரம் என நீட்டும் வழி நீட்டல்.தொ.வே.