- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- அபயம் அபயம் அபயம்.
- கண்ணிகள்
- உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
- சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே296 அபயம்
- எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை
- அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே அபயம்
- தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
- சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே அபயம்
- ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
- என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே அபயம்
- வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
- றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம்
- நாரா யணனொடு நான்முக னாதியர்
- பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம்
- அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
- தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம்
- குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
- அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம்
- செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
- நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே அபயம்
- வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
- அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்
- எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
- புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்
- மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
- பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்
- நாத முடியில்297 நடம்புரிந் தன்பர்க்குப்
- போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்
- உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
- சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம்
- சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
- புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
- அபயம் அபயம் அபயம்.
- 296. பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.
- 297. முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.