- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
- வல்லி மணாளரே வாரீர்
- மணிமன்ற வாணரே வாரீர்.
- கண்ணிகள்
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
- அம்பல வாணரே வாரீர்
- அன்புடை யாளரே வாரீர். வாரீர்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
- அந்தண ரேஇங்கு வாரீர்
- அம்பலத் தையரே வாரீர். வாரீர்
- அன்புரு வானவர் இன்புற உள்ளே
- அறிவுரு வாயினீர் வாரீர்
- அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
- அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
- அரும்பெருஞ் சித்தரே வாரீர்
- அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
- அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
- அன்பனு மாயினீர் வாரீர்
- அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
- அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
- அம்பல வாணரே வாரீர்
- அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
- அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
- அன்பருக் கன்பரே வாரீர்
- இன்பம் தரஇங்கு வாரீர். வாரீர்
- அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
- அடிக்கம லத்தீரே வாரீர்
- நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
- அளித்திட வல்லீரே வாரீர்
- களித்தென்னை ஆண்டீரே வாரீர். வாரீர்
- அம்பர மானசி தம்பர நாடகம்
- ஆடவல் லீர்இங்கு வாரீர்
- பாடல்உ வந்தீரே298 வாரீர். வாரீர்
- ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
- அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- ஆனந்த நாடரே வாரீர். வாரீர்
- ஆகம வேதம் அனேக முகங்கொண்
- டருச்சிக்கும் பாதரே வாரீர்
- ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
- ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
- ஆரிய ரேஇங்கு வாரீர்
- ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
- ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
- ஆரிய ரேஇங்கு வாரீர்
- ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
- ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
- ஆனந்த ரேஇங்கு வாரீர்
- ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
- தமுதம் அளித்தீரே வாரீர்
- ஆடிய பாதரே வாரீர். வாரீர்
- ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
- கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்
- ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
- ஜோதிய ரேஇங்கு வாரீர்
- வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
- பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
- கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
- ஆண்டவ ரேஇங்கு வாரீர்
- தாண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
- ஆணவம் போக்கினீர் வாரீர்
- காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
- இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
- இறையவ ரேஇங்கு வாரீர்
- காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
- இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
- இதுதரு ணம்இங்கு வாரீர்
- இன்னமு தாயினீர் வாரீர். வாரீர்
- இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
- இருக்கின்ற நாதரே வாரீர்
- இருக்கின் பொருளானீர் வாரீர். வாரீர்
- இரவும் பகலும் இதயத்தி லூறி
- இனிக்கும் அமுதரே வாரீர்
- இனித்தரி யேன்இங்கு வாரீர். வாரீர்
- இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
- இதுதரு ணம்இங்கு வாரீர்
- இருமையும் ஆயினீர் வாரீர். வாரீர்
- இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
- கிதுதரு ணம்இங்கு வாரீர்
- இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
- இத்தரு ணம்இங்கு வாரீர்
- இதநடஞ் செய்கின்றீர் வாரீர். வாரீர்
- இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
- இதுஎன் றளித்தீரே வாரீர்
- இதயத் திருந்தீரே வாரீர். வாரீர்
- இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
- எங்கும் நிறைந்தீரே வாரீர்
- இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்
- இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை
- ஏறவைத் தீர்இங்கு வாரீர்
- இறுதியி லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
- கின்பமும் ஆயினீர் வாரீர்
- அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
- ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
- இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
- உதயச் சுடரினீர் வாரீர். வாரீர்
- ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
- இன்புறச் செய்கின்றீர் வாரீர்
- வன்பர்க் கரியீரே வாரீர். வாரீர்
- ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
- கெட்டா திருந்தீரே வாரீர்
- நட்டார்க் கெளியீரே வாரீர். வாரீர்
- ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
- டேசரே நீர்இங்கு வாரீர்
- நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈசர் பலிக்குழல்299 நேசர்என் றன்பர்கள்
- ஏசநின் றீர்இங்கு வாரீர்
- நாசமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
- இயம்பநின் றீர்இங்கு வாரீர்
- வயந்தரு வீர்இங்கு வாரீர் வாரீர்
- ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
- கீதல்செய் வீர்இங்கு வாரீர்
- ஓதரி யீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
- றீடணை யீர்இங்கு வாரீர்
- ஆடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
- ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
- ஆண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
- குள்ள துரைசெய்தீர் வாரீர்
- வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
- உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
- ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
- என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- உறவும் பகையும் உடைய நடையில்
- உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
- பிறவுநண் ணேன்இங்கு வாரீர். வாரீர்
- உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
- உள்ளத் திருந்தீரே வாரீர்
- விள்ளற் கரியீரே வாரீர். வாரீர்
- உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
- உய்யவல் லேன்இங்கு வாரீர்
- செய்யவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- உடையவ ரார்இக் கடையவ னேனுக்
- குடையவ ரேஇங்கு வாரீர்
- சடையவ ரே300 இங்கு வாரீர். வாரீர்
- உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
- உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
- இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
- உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
- துண்டி விரும்பினேன் வாரீர்
- உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
- உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற
- உத்தம ரேஇங்கு வாரீர்
- உற்ற துணையானீர் வாரீர். வாரீர்
- உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
- குற்றவர் மற்றிலை வாரீர்
- உற்றறிந் தீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு
- மோன நடேசரே வாரீர்
- ஞான நடேசரே வாரீர். வாரீர்
- ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி
- வோருமில் லீர்இங்கு வாரீர்
- யாருமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
- வீறுடை யீர்இங்கு வாரீர்
- நீறுடை யீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
- ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்
- ஆன்றவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
- ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
- தேற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
- ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
- பாடல்சொல் வீர்இங்கு வாரீர்
- ஆடல்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
- ஆக்க மடுத்தீரே வாரீர்
- தூக்கம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்
- ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
- றோமை அறிவித்தீர் வாரீர்
- சேமஞ் செறிவித்தீர் வாரீர். வாரீர்
- ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
- யோகம் கொடுத்தீரே வாரீர்
- போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்
- ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
- ஓதிய நாதரே வாரீர்
- ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்
- என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
- என்குறை என்முன்னீர் வாரீர்
- தன்குறை இல்லீரே வாரீர். வாரீர்
- என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
- இன்னுயிர் ஆயினீர் வாரீர்
- என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்
- என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
- என்கண் ணனையீரே வாரீர்
- என்கண் ணுதலீரே வாரீர். வாரீர்
- எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
- எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்
- சொல்லா நிலையினீர் வாரீர். வாரீர்
- எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
- எட்டும் படிசெய்தீர் வாரீர்
- எட்டுரு வாயினீர் வாரீர்.301 வாரீர்
- என்று கண்டாய்இது302 நன்றுகொண் டாளுக
- என்றுதந் தீர்இங்கு வாரீர்
- அன்றுவந் தீர்இன்று வாரீர். வாரீர்
- எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்
- இச்சம யம்இங்கு வாரீர்
- மெய்ச்சம யந்தந்தீர் வாரீர். வாரீர்
- என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
- இன்பால் பெறுகின்றீர் வாரீர்
- தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
- எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
- திச்சைகண் டீர்இங்கு வாரீர்
- அச்சம்த விர்த்தீரே வாரீர். வாரீர்
- எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
- எண்ணம் எனக்கில்லை வாரீர்
- வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். வாரீர்
- ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
- பாராய ணம்செய்வீர் வாரீர்
- ஊராயம் ஆயினீர் வாரீர். வாரீர்
- ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்
- ஏம சபேசரே வாரீர்
- சோம சிகாமணி வாரீர். வாரீர்
- ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
- ஏதது சொல்லுவீர் வாரீர்
- ஈதல் உடையீரே வாரீர். வாரீர்
- ஏக பராபர யோக வெளிக்கப்பால்
- ஏக வெளிநின்றீர் வாரீர்
- ஏகர் அனேகரே வாரீர். வாரீர்
- ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
- ஏறவைத் தீர்இங்கு வாரீர்
- தேறவைத் தீர்இங்கு வாரீர். வாரீர்
- ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
- றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
- தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
- ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
- றேகாத லாற்சொன்னீர் வாரீர்
- வேகாத காலினீர் வாரீர். வாரீர்
- ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே
- ஏடாஎன் றீர்இங்கு வாரீர்
- ஈடாவார் இல்லீரே வாரீர். வாரீர்
- ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
- ஈசான மேலென்றீர் வாரீர்
- ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்
- ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
- றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்
- ஆனின்பால் ஆடுவீர் வாரீர். வாரீர்
- ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்
- தைந்துஞ் செயும்என்றீர் வாரீர்
- இந்து சிகாமணி வாரீர். வாரீர்
- ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
- ஐயம் தவிர்த்தீரே வாரீர்
- மெய்யம் பலத்தீரே வாரீர். வாரீர்
- ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
- தையர் தொழநின்றீர் வாரீர்
- துய்யர் உளநின்றீர் வாரீர். வாரீர்
- ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
- றைவணர் ஏத்துவீர் வாரீர்
- பொய்வணம் போக்குவீர் வாரீர். வாரீர்
- ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
- ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
- நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
- ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
- ஒப்பாரி அல்லகாண் வாரீர்
- முப்பாழ் கடந்தீரே வாரீர். வாரீர்
- ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்
- ஒத்த இடங்காட்ட வாரீர்
- சித்த சிகாமணி வாரீர். வாரீர்
- ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
- ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்
- எட்டுக் குணத்தீரே வாரீர். வாரீர்
- ஒருமை நிலையில் இருமையும் தந்த
- ஒருமையி னீர்இங்கு வாரீர்
- பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
- ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
- உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
- பெண்மை304 இடங்கொண்டீர் வாரீர். வாரீர்
- ஓங்கார நாடகம் பாங்காகச்305 செய்கின்ற
- ஓங்கார நாடரே வாரீர்
- ஆங்கார நீக்கினீர் வாரீர். வாரீர்
- ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
- ஓங்கு நடேசரே வாரீர்
- பாங்குசெய் வீர்இங்கு வாரீர். வாரீர்
- ஓசையின் உள்ளேஓர் ஆசை306 உதிக்கமெல்
- ஓசைசெய் வித்தீரே வாரீர்
- பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்
- ஓரா துலகினைப் பாரா திருநினக்
- கோரா வகைஎன்றீர் வாரீர்
- பேரா நிலைதந்தீர் வாரீர். வாரீர்
- ஓடாது மாயையை நாடாது நன்னெறி
- ஊடா திருஎன்றீர் வாரீர்
- வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்
- ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்
- ஓலக்கங் காட்டினீர் வாரீர்
- காலக் கணக்கில்லீர் வாரீர். வாரீர்
- ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
- யூடத்தைக் காட்டினீர் வாரீர்
- வேடத்தைப் பூட்டினீர் வாரீர். வாரீர்
- ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
- ஓமத்தன்308 ஆக்கினீர் வாரீர்
- சாமத்த309 நீக்கினீர் வாரீர். வாரீர்
- ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
- ஊமென்று310 காட்டினீர் வாரீர்
- நாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்
- ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
- செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
- ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். வாரீர்
- கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
- கடல்பொங்கு கின்றது வாரீர்
- உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்
- கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
- கண்மணி யீர்இங்கு வாரீர்
- உண்மணி யீர்இங்கு வாரீர். வாரீர்
- கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்
- காரண ரேஇங்கு வாரீர்
- பூரண ரேஇங்கு வாரீர். வாரீர்
- வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
- வல்லி மணாளரே வாரீர்
- மணிமன்ற வாணரே வாரீர்.
- 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
- 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
- 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,N' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
- 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
- 305. பாங்காரச் - பி. இரா.
- 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
- 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
- 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.