- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
- என்ன புண்ணியம் செய்தே னோ.
- பல்லவி எடுப்பு
- மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்
- சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே. என்ன
- கண்ணிகள்
- பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
- போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
- அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
- ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
- பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
- பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
- ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
- அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
- எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
- எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
- மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
- மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
- ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
- ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
- ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
- டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன
- அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்
- அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
- சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
- சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. என்ன
- ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
- ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
- காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
- காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன
- பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
- பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
- வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
- வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
- என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
- என்ன புண்ணியம் செய்தே னோ.