- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அன்பனே அப்பா அம்மையே அரசே
- அருட்பெருஞ் சோதியே அடியேன்
- துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
- சுகத்திலே தோற்றிய சுகமே
- இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
- என்னுளே இலங்கிய பொருளே
- வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணினுள் மணியே
- இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
- இணையிலா என்னுடை அன்பே
- சொந்தநல் உறவே அம்பலத் தரசே
- சோதியே சோதியே விரைந்து
- வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- கோஎன எனது குருஎன ஞான
- குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
- பூஎன அதிலே மணம்என வணத்தின்
- பொலிவென வயங்கிய பொற்பே
- தேவெனத் தேவ தேவென ஒருமைச்
- சிவம்என விளங்கிய பதியே
- வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
- ஒருவனே உலகெலாம் அறியத்
- தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
- சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
- கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
- கடவுளே கனகஅம் பலத்தென்
- வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- நல்லவா அளித்த நல்லவா எனையும்
- நயந்தவா நாயினேன் நவின்ற
- சொல்லவா எனக்குத் துணையவா ஞான
- சுகத்தவா சோதிஅம் பலவா
- அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
- ஆண்டவா தாண்டவா எல்லாம்
- வல்லவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- திண்மையே முதலைங் குணக்கரு வாய
- செல்வமே நல்வழி காட்டும்
- கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
- கண்ணுற இயைந்தநற் கருத்தே
- உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
- ஒருதனித் தெய்வமே உலவா
- வண்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
- கற்பகத் தனிப்பெருந் தருவே
- தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
- சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
- சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
- சித்தியே சுத்தசன் மார்க்க
- வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
- ஈன்றவா என்னவா வேதம்
- சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
- துதியவா அம்பலத் தமுதம்
- அன்னவா அறிவால் அறியரி வறிவா
- ஆனந்த நாடகம் புரியும்
- மன்னவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
- விளக்கினால் என்னுளம் விளக்கி
- இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
- கென்கருத் தனைத்தையும் புரிந்தே
- சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
- சத்தியைத் தயவினால் தருக
- வரதனே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- 322. அறியறி வறிவா - பி. இரா., ச. மு. க.