- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
- கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
- தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.
- திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
- டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
- பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
- இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
- எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
- வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
- கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
- முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.
- இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும்
- கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே
- தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே
- முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம் முழுதையுமே.
- புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
- நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
- முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
- கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
- வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
- நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
- ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருளா ரமுதம்
- தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
- நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.