- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
- சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
- சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
- நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
- உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
- வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
- குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
- மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
- மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
- சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
- இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
- கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
- கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
- கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
- தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
- உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.
- உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
- நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
- இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
- மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
- மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
- இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
- பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
- சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
- சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க
- விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன்
- றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய்
- இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே.
- தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
- சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
- நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
- இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
- நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
- மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
- குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
- தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
- நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
- பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
- கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
- மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.
- வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
- ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
- டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
- வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
- மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
- உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
- தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
- துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே.