- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
- பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
- எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
- அச்சோ எனக்கவன்போல் ஆர்.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
- றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாவல்ல
- செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
- சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண்
- பார்த்தான்என் எண்ணமெலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
- துன்பமெலாம் தூக்கமெலாம் சூழாது நீக்கிவிட்டான்
- இன்பமெலாம் தந்தான் இசைந்து.
- இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும்
- நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு
- மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என்
- தாயைமகிழ் அம்பலவன் தான்.
- தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
- தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
- நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
- வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
- மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
- தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
- தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
- தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
- தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
- ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
- றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
- எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
- ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு
- நானே களித்து நடிக்கின்றேன் - தானேஎன்
- தந்தைஎன்பால் வைத்த தயவைநினைக் குந்தோறும்
- சிந்தைவியக் கின்றேன் தெரிந்து.
- தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று
- புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச்
- சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள்
- நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்.
- நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது
- வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து
- தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான்
- அம்பலவன் தன்அருளி னால்.