- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே
- தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே
- பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்
- தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.
- கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
- சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
- மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
- யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
- ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
- சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
- தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
- தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
- கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
- ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
- ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
- கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
- சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
- பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
- வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.
- எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின்
- நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே
- கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென்
- பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே.
- பரமான சிதம்பர ஞான சபாபதியே
- வரமான எல்லாம் எனக்கீந்தநல் வள்ளலேஎன்
- தரமானது சற்றும் குறித்திலை சாமிநின்னை
- உரமானஉள் அன்பர்கள் ஏசுவர் உண்மைஈதே.
- தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
- நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே
- காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின்
- சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே.
- பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
- மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
- எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
- நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.