- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
- வாழ்விலே வரவிலே மலஞ்சார்
- தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
- தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
- காலிலே ஆசை வைத்தனன் நீயும்
- கனவினும் நனவினும் எனைநின்
- பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- மதத்திலே சமய வழக்கிலே மாயை
- மருட்டிலே இருட்டிலே மறவாக்
- கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
- கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
- பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
- பரிந்தெனை அழிவிலா நல்ல
- பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- குலத்திலே சமயக் குழியிலே நரகக்
- குழியிலே குமைந்துவீண் பொழுது
- நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
- நிற்கின்றார் நிற்கநான் உவந்து
- வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
- மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
- பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
- கொழுநரும் மகளிரும் நாண
- நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
- நீங்கிடா திருந்துநீ என்னோ
- டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
- றறிவுரு வாகிநான் உனையே
- பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
- வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
- நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
- நாட்டமும் கற்பகோ டியினும்
- வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
- வழங்கிடப் பெற்றனன் மரண
- பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
- நாதனை என்உளே கண்டு
- கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
- கூடிடக் குலவிஇன் புருவாய்
- ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
- அம்பலம் தன்னையே குறித்துப்
- பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
- சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
- விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
- விழித்திருந் திடவும்நோ வாமே
- மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
- மன்றிலே வயங்கிய தலைமைப்
- பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
- புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
- கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
- கருத்தொடு வாழவும் கருத்தில்
- துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
- துலங்கவும் திருவருட் சோதிப்
- பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
- வெம்மையே நீங்கிட விமல
- வாதமே வழங்க வானமே முழங்க
- வையமே உய்யஓர் பரம
- நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
- நன்மணி மன்றிலே நடிக்கும்
- பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
- கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
- சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
- சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
- சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
- செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
- பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.