- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின்
- பாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே
- போதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே
- நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.
- வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
- சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
- எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
- விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.
- சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
- சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
- நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
- பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
- வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
- புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
- திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
- நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
- நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
- சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
- சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
- தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை
- இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம்
- அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே
- சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே.
- தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
- மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
- நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
- சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
- கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
- உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
- பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
- பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
- தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்
- சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்
- காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்
- தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.
- 327. நண்ணினனே - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.