- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- கடையேன் புரிந்த குற்றமெலாம் கருதா தென்னுட் கலந்துகொண்டு
- தடையே முழுதும் தவிர்த்தருளித் தனித்த ஞான அமுதளித்துப்
- புடையே இருத்தி அருட்சித்திப் பூவை தனையும் புணர்த்திஅருட்
- கொடையே கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே
- படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
- தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
- கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
- உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
- திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
- குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- சேட்டித் துலகச் சிறுநடையில் பல்கால் புகுந்து திரிந்துமயல்
- நீட்டித் தலைந்த மனத்தைஒரு நிமிடத் தடக்கிச் சன்மார்க்கக்
- கோட்டிக் கியன்ற குணங்களெலாம் கூடப் புரிந்து மெய்ந்நிலையைக்
- காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
- வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
- கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
- காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே
- தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில்
- ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் டுஞற்றி யோடும் மனக்குரங்கைக்
- காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
- வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
- அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
- கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற
- வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு329 பசுவின் தீம்பாலும்
- நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும்
- கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா
- நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்
- மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகாத
- கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
- திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
- தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
- கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே
- பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
- விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
- கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
- அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
- உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
- கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
- இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
- முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த
- கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற
- புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
- தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
- கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
- எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
- திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
- கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்
- சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின்
- ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
- காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே
- பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்
- வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
- மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
- கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது
- நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச்
- சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
- காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- 329. விளங்கும் - முதற்பதிப்பு., பொ, சு., பி. இரா., ச. மு. க.