- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
- பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்
- அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்
- கொள்ளற் கபயங் கொடு.
- ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
- சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
- பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
- தாடிக் களிக்க அருள்.
- இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
- சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற
- தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்
- பொன்னேர் பதத்தைப் புகழ்.
- ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே
- ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்
- போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்
- போற்றும் படிப்பெற்ற போது.
- உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
- வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
- கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
- பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
- ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
- ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
- பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதி அது.
- எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன்
- நல்லான் எனக்குமிக நன்களித்தான் - எல்லாரும்
- கண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம்
- உண்டுவியக் கின்றேன் உவந்து.
- ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
- தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
- கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
- ஈசனத்தன் அம்பலவ னே.
- ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன்
- பொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத்
- தழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர்
- மொழிஆடு தற்கு முனம்.
- ஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி
- அப்பனெலாம் வல்லதிரு அம்பலத்தான் - இப்புவியில்
- வந்தான் இரவி வருதற்கு முன்கருணை
- தந்தானென் னுட்கலந்தான் தான்.
- ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
- சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
- ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
- வெந்தொழில்போய் நீங்க விரைந்து.
- ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
- செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி
- விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக
- நிரந்தொன்றாய்330 நின்றான் நிலத்து.
- சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான
- நீதிப் பொதுவே நிறைநிதியே - சோதிக்
- கடவுளே மாயைஇரு கன்மமிருள் எல்லாம்
- விடவுளே நின்று விளங்கு.
- துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த
- அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்
- அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்
- பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து.
- தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
- ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
- நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
- தாங்கினேன் சத்தியமாத் தான்.
- துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
- அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்
- தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
- ஓங்கினேன் உண்மை உரை.
- 330. நிறைந்தொன்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.நிரைந்தொன்றாய் - பி. இரா. ' நிரந்தொன்றாய் ' என்பது அடிகள் எழுத்து.