- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
- வரையுள தாதலால் மகனே
- எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
- தெழில்உறு மங்கலம் புனைந்தே
- குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
- கோலத்தால் காட்டுக எனவே
- வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
- வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
- எம்பொருள் எனும்என் அன்புடை மகனே
- இரண்டரைக் கடிகையில் உனக்கே
- அம்புவி வானம் அறியமெய் அருளாம்
- அனங்கனை333 தனைமணம் புரிவித்
- தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும்
- உண்மைஈ தாதலால் உலகில்
- வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார்
- மெய்ப்பொது நடத்திறை யவரே.
- அன்புடை மகனே மெய்யருள் திருவை
- அண்டர்கள் வியப்புற நினக்கே
- இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
- இரண்டரைக் கடிகையில் விரைந்தே
- துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
- தூய்மைசேர் நன்மணக் கோலம்
- பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
- பொதுநடம் புரிகின்றார் தாமே.
- ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
- இரண்டரைக் கடிகையில் நினக்கே
- ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
- உண்மைஈ தாதலால் இனிவீண்
- போதுபோக் காமல் மங்கலக் கோலம்
- புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
- தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
- தெருட்டிய சிற்சபை யவரே.
- விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
- மெய்யருள் திருவினை நினக்கே
- வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
- வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
- இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
- எல்லையுள் எழில்மணக் கோலம்
- நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
- நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
- களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
- கடிகைஓர் இரண்டரை அதனில்
- ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
- உனக்குநன் மணம்புரி விப்பாம்
- அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
- அணிபெறப் புனைகநீ விரைந்தே
- வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
- விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
- கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக்
- களிப்பொடு மணம்புரி விப்பாம்
- விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல்
- விரைந்துநன் மங்கலக் கோலம்
- நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர்
- நவிலும்அவ் வுலகவர் பிறரும்
- இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார்
- இயலுறு சிற்சபை யவரே.
- ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே
- அருள்ஒளித் திருவைநின் தனக்கே
- மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்
- விரைந்திரண் டரைக்கடி கையிலே
- கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும்
- களிப்பொடு மங்கலக் கோலம்
- வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக
- என்றனர் மன்றிறை யவரே.
- தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே
- தூயநீர் ஆடுக துணிந்தே
- பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
- பண்பொடு புனைந்துகொள் கடிகை
- ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை
- எழில்உற மணம்புரி விப்பாம்
- ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார்
- இயன்மணி மன்றிறை யவரே.
- மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை
- மணம்புரி விக்கின்றாம் இதுவே
- வயங்குநல் தருணக் காலைகாண் நீநன்
- மங்கலக் கோலமே விளங்க
- இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை
- எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார்
- சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த
- தந்தையார் சிற்சபை யவரே.
- 333. அங்கனை - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா., ச. மு. க.