- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
- அப்பாஉன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
- வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
- திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே.
- எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
- ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
- செய்யாள் மருவும் புயனுடைத் தேவனும் சேணவனும்
- நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.
- வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக்
- கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின்
- தாளாகும் நீழல் அதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு
- நாளாகும் நாள்எந்த நாள்அறி யேன்தணி காசலனே.
- ஊன்பார்க்கும் இவ்வுடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
- மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே
- தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை
- நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே.
- என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
- மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
- தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
- பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் புகலிடமே.
- பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயுலக
- வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யும்மயங்கேல்
- போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த
- தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே.