- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
- பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
- தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
- சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
- முழுதும்ஆ னான்என ஆகம வேத
- முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
- எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
- என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
- தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
- சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
- சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
- நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
- நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
- எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
- நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
- அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
- அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
- புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
- போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
- இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
- கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
- கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
- பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
- பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
- நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
- நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
- எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
- என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
- புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
- பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
- சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
- சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
- மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
- வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
- என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
- ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
- ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
- பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
- பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
- அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
- அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
- இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
- வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
- கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
- கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
- பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
- பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
- இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
- வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
- அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
- அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
- தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
- சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
- இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
- அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
- அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
- வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
- வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
- விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
- விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
- இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
- எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.