- கலித்தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- இரவு விடிந்தது இணையடி வாய்த்த
- பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
- பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
- தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
- தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
- ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
- இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
- துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
- இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
- எண்ணம் பலித்ததென்று உந்தீபற.
- ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
- தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
- சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.
- திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
- பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
- பலித்தது பூசையென்று உந்தீபற.
- உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
- தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
- தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
- எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
- சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
- தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
- சிந்தை களித்தேன்என்று உந்தீபற
- சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
- முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
- சித்தியை உற்றேன்என்று உந்தீபற
- சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.