- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- அற்புதம் அற்புத மே - அருள்
- அற்புதம் அற்புத மே.
- கண்ணிகள்
- சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
- சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
- கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
- கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்
- செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
- சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
- இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
- இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
- ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
- அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
- ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
- என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
- சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
- சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
- நித்திய ஞான நிறையமு துண்டனன்
- நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
- வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
- வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
- தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
- சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்
- புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
- பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
- மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
- வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
- வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
- வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
- செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
- சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்
- சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
- சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
- மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
- மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
- அற்புதம் அற்புத மே - அருள்
- அற்புதம் அற்புத மே.