- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.
- கண்ணிகள்
- ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
- வீதிஉண் டாச்சுத டி - அம்மா
- வீதிஉண் டாச்சுத டி. ஆணி
- வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
- மேடை இருந்தத டி - அம்மா
- மேடை இருந்தத டி. ஆணி
- மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
- கூடம் இருந்தத டி - அம்மா
- கூடம் இருந்தத டி. ஆணி
- கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
- மாடம் இருந்தத டி - அம்மா
- மாடம் இருந்தத டி. ஆணி
- ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
- என்னென்று சொல்வன டி - அம்மா
- என்னென்று சொல்வன டி. ஆணி
- ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
- சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
- சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி
- பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
- பவளம தாச்சுத டி - அம்மா
- பவளம தாச்சுத டி. ஆணி
- மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
- மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா
- மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி
- பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
- பேர்மணி ஆச்சுத டி - அம்மா
- பேர்மணி ஆச்சுத டி. ஆணி
- வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
- வெண்மணி ஆச்சுத டி - அம்மா
- வெண்மணி ஆச்சுத டி. ஆணி
- புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
- பொன்மணி ஆச்சுத டி - அம்மா
- பொன்மணி ஆச்சுத டி. ஆணி
- பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
- படிகம தாச்சுத டி - அம்மா
- படிகம தாச்சுத டி. ஆணி
- ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
- இசைந்தபொற் றம்பம டி - அம்மா
- இசைந்தபொற் றம்பம டி. ஆணி
- பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
- புதுமைஎன் சொல்வன டி - அம்மா
- புதுமைஎன் சொல்வன டி. ஆணி
- ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
- என்னள வல்லவ டி - அம்மா
- என்னள வல்லவ டி. ஆணி
- ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
- ஆகவந் தார்கள டி - அம்மா
- ஆகவந் தார்கள டி. ஆணி
- வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
- வல்லபம் பெற்றன டி - அம்மா
- வல்லபம் பெற்றன டி. ஆணி
- வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
- மணிமுடி கண்டேன டி - அம்மா
- மணிமுடி கண்டேன டி. ஆணி
- மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
- மற்றது கண்டேன டி - அம்மா
- மற்றது கண்டேன டி. ஆணி
- கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
- கோயில் இருந்தத டி - அம்மா
- கோயில் இருந்தத டி. ஆணி
- கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
- கூசாது சென்றன டி - அம்மா
- கூசாது சென்றன டி. ஆணி
- கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
- கோடிபல் கோடிய டி - அம்மா
- கோடிபல் கோடிய டி. ஆணி
- ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
- ஐவண்ணம் ஆகும டி - அம்மா
- ஐவண்ணம் ஆகும டி. ஆணி
- அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
- அப்பாலே சென்றன டி - அம்மா
- அப்பாலே சென்றன டி. ஆணி
- அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
- ஐவர் இருந்தார டி - அம்மா
- ஐவர் இருந்தார டி. ஆணி
- மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
- மணிவாயில் உற்றேன டி - அம்மா
- மணிவாயில் உற்றேன டி. ஆணி
- எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
- இருவர் இருந்தார டி - அம்மா
- இருவர் இருந்தார டி. ஆணி
- அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
- அன்பொடு கண்டேன டி - அம்மா
- அன்பொடு கண்டேன டி. ஆணி
- அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
- அம்மை இருந்தாள டி - அம்மா
- அம்மை இருந்தாள டி. ஆணி
- அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
- அமுதமும் உண்டேன டி - அம்மா
- அமுதமும் உண்டேன டி. ஆணி
- தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
- சந்நிதி கண்டேன டி - அம்மா
- சந்நிதி கண்டேன டி. ஆணி
- சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
- சாமி அறிவார டி - அம்மா
- சாமி அறிவார டி.
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.