- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
- கோதையர் பால்விரைந் தோடிச்
- சென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்
- திருவடிக் காக்கும்நாள் உளதோ
- என்தனி உயிரே என்னுடைப் பொருளே
- என்உளத் திணிதெழும் இன்பே
- மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
- வந்தமர்ந் தருள்செயும் மணியே.
- மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
- வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
- கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
- கழலடிக் காக்கும்நாள் உளதோ
- குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
- குறிகுணங் கடந்ததோர் நெறியே
- எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
- எந்தையே தணிகைஎம் இறையே.
- இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்
- இலைநெடு வேற்கணார் அளகச்
- சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்
- திருவடிக் காக்கும்நாள் உளதோ
- மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
- வள்ளலே உள்ளகப் பொருளே
- அறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
- அணிதிருத் தணிகைவாழ் அரைசே.
- அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
- அலர்முலை அணங்கனார் அல்குல்
- புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
- பாலனே வேலுடை யவனே
- விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
- வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
- விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
- விம்முறும் இளமுலை மடவார்
- களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
- கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
- அளக்கருங் கருணை வாரியே ஞான
- அமுதமே ஆனந்தப் பெருக்கே
- கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
- கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
- திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
- கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
- கழல்வழி நடத்தும்நாள் உளதோ
- மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
- வண்புனத் தடைந்திட்ட மணியே
- வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
- மாமலை அமர்ந்தருள் மருந்தே.
- மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
- வாணுதல் மங்கையர் இடத்தில்
- பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
- ஆனந்தத் தேறலே அமுதே
- இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
- இனிதமர்ந் தருளிய இன்பே.
- இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
- ஏந்திழை யவர்புழுக் குழியில்
- துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
- துணையடிக் காக்கும்நாள் உளதோ
- அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
- அரிஅயன் பணிபெரி யவனே
- வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
- மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
- வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
- வலித்திடும் மங்கையர் தம்பால்
- தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
- தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
- சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
- தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
- ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
- உதவுசீர் அருட்பெருங் குன்றே.