- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
- முறியனேன் தனக்குநின் அடியாம்
- ஏடவிழ் கமலத் திருநற வருந்த
- என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
- ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
- ஐயருக் கொருதவப் பேறே
- கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே
- கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
- கடையனேன் முடிமிசை அமர்த்தி
- உற்றஇவ் வுலக மயக்கற மெய்மை
- உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
- நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
- நல்அருட் சோதியே நவைதீர்
- கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
- நாயினும் கடையஇந் நாய்க்குன்
- சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
- தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
- ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
- அருள்பழுத் தளிந்தசெங் கனியே
- கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
- பாவியேன் தன்முகம் பார்த்திங்
- கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
- இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
- சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
- தெள்ளிய அமுதமே தேனே
- குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்
- முன்புழன் றேங்கும்இவ் எளியேன்
- நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத
- நீழல்வந் தடையும்நாள் என்றோ
- மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ
- மணிமகிழ் கண்ணினுள் மணியே
- கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
- மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
- ஒருவரும் நினது திருவடிப் புகழை
- உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
- அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
- அரும்பெறல் செல்வமே அமுதே
- குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
- றலைந்திடும் பாவியேன் இயற்றும்
- பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
- பாதுகாத் தளிப்பதுன் பரமே
- மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
- முத்தமே முக்தியின் முதலே
- கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- நின்நிலை அறியா வஞ்சகர் இடத்தில்
- நின்றுநின் றலைதரும் எளியேன்
- தன்நிலை அறிந்தும் ஐயகோ இன்னும்
- தயைஇலா திருந்தனை என்னே
- பொன்நிலைப் பொதுவில் நடஞ்செயும் பவளப்
- பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
- கொல்நிலை வேல்கைக் கொளும்திருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
- பதகர்பால் நாள்தொறும் சென்றே
- வாடிநின் றேங்கும் ஏழையேன் நெஞ்ச
- வாட்டம்இங் கறிந்திலை என்னே
- ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
- அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
- கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
- வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
- துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
- துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
- அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
- அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
- கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.