- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
- எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
- கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
- கலந்தான் கருணை கலந்து.
- எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
- எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
- நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
- ஒன்றாகி நின்றான் உவந்து.
- எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
- பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
- தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
- வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
- சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
- நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
- தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
- சந்தோட மாய்இருமின் சார்ந்து.
- அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
- அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
- செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
- அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
- சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
- உடையான் உளத்தே உவந்து.
- தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
- தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
- ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
- மேகத்திற் குண்டோ விளம்பு.
- பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
- கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்
- தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
- நிலையும் கொடுத்தான் நிறைந்து.
- வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
- செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
- ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
- தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
- வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
- அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
- இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
- துன்பமெலாம் போன தொலைந்து.
- அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
- அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே
- மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
- சாமா றிலைஎனக்குத் தான்.
- நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
- தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
- புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
- புகுந்தான் கருணை புரிந்து.
- ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
- நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
- சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
- பத்திஎலாம் பெற்ற பலன்.
- தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
- ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
- தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
- வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.
- வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான
- நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம்
- ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்
- பாடுகநீ என்றான் பரன்.
- தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
- ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
- செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
- எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
- சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
- நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
- ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
- தானவிளை யாட்டியற்றத் தான்.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
- நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
- நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
- ஊன்நாடி நில்லா உழி.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்
- கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்
- துண்டேன் அமுதம் உவந்து.
- துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
- சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
- நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
- மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
- பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
- சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
- தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
- கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
- சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
- நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
- பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
- வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
- சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
- வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
- நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
- தாயே அனையான் தனித்து.
- கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம்
- சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன்
- ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்
- மாகா தலனா மகிழ்ந்து.
- நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
- ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
- பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
- நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
- சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
- சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்
- றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
- நண்ணுமின்பத் தேன்என்று நான்.
- நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
- நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
- அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
- இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
- எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
- இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
- சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
- என்மார்க்கம் காண்பேன் இனி.
- சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
- நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
- சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
- உற்றிங் கறிந்தேன் உவந்து.
- வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
- வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
- சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
- என்ன பயனோ இவை.
- சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
- வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
- தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
- நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.
- பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
- மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்
- சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
- இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.
- வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்
- தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த
- மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
- இங்குநடஞ் செய்வான் இனி.
- சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்
- சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்
- ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே
- வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து.
- இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்
- நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல்
- சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
- நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.
- என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான்
- தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே
- தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
- வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து.
- செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
- கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
- அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
- தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.
- இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்
- எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்
- சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்
- உற்றவரை உற்றவர்கள் உற்று.
- யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
- ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
- அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
- கம்பலத்தால் ஆகும் களித்து.
- என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
- அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
- திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்
- குருவம் பலத்தேஎன் றுன்.
- ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
- நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
- கென்மார்க்க மும்ஒன்றா மே.
- மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது
- தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர்
- நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.
- இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
- நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள்
- அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்
- அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்.
- ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில்
- சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த
- காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்
- நீரத்தைச் சேர்வீர் நிஜம்.
- வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை
- நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்
- தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட
- உள்ளியநாள் ஈதறிமின் உற்று.
- போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்
- நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்
- அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்
- றிப்புவியில் இத்தருணம் இங்கு.
- ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற
- நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள
- நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள்
- அனையான் வருகின்றான் ஆய்ந்து.