- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
- துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
- அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
- என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
- தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
- ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
- தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
- மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
- வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
- நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
- மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
- என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
- மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
- திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
- நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
- கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
- பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
- எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
- மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
- பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
- இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
- முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
- சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
- சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
- ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
- ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
- ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
- வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
- இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
- மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
- தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
- தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.