- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
- புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
- புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
- உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
- உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
- மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
- மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
- தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
- சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.
- பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
- பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
- துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
- துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
- தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
- சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
- கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
- காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
- எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
- அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
- அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
- பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
- பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
- வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
- மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
- நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
- சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
- தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
- சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
- சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
- ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
- உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
- விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
- மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
- திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
- செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
- வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
- வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
- கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
- கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
- களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
- களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
- தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
- செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
- ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
- ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
- அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
- ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
- அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
- கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
- காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
- இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
- யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
- உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
- ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
- திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
- சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
- வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
- வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
- பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
- பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
- கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
- கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.
- உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
- உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
- எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
- என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
- தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
- சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
- கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
- கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
- தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
- நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
- நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
- அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
- ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
- சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
- சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
- நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
- நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
- எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
- என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
- சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
- செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
- முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
- முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
- சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
- இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
- தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
- அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
- அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
- முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
- முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
- கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
- வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
- மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
- பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
- புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
- செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
- சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
- சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
- திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
- ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
- உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
- வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
- மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
- சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
- தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
- புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
- மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
- பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
- அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
- அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
- மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
- மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
- சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
- சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
- எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
- இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
- பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
- இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
- இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
- மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
- மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
- சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
- சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
- பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
- பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
- உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
- உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
- கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
- கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
- சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
- தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
- இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
- என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
- சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
- தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
- நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
- நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
- புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
- பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
- அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
- அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- 359. அகமறியீர் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.