- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
- தருணம்இதே அறிமின் என்றே
- வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
- கின்றார்இம் மனிதர்அந்தோ
- தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
- உளங்கலந்த தலைவா இங்கே
- நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
- இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
- இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
- தருணம்இதே என்று வாய்மை
- அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
- வார்த்தைகள்என் றறைகின் றாரால்
- மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
- எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
- சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
- மனிதர்மதித் திறமை என்னே.
- சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
- படுவாரைத் துணிந்து கொல்லக்
- கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
- துண்மையினில் கொண்டு நீவீர்
- நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
- போலும்அன்றி நினைத்த வாங்கே
- பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
- பதிப்புகழைப் பேசு வீரே.
- தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
- உலகாளச் சூழ்ந்த காமப்
- பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
- நும்முயிரைப் பிடிக்க நாளைச்
- சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
- ஞானசபைத் தலைவன் உம்மைக்
- கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
- இவ்வுலகில் குலாவு வீரே.
- பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
- திடுகின்றீர் பேய ரேநீர்
- இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
- மதித்தீரோ இரவில் தூங்கி
- மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
- நும்மனத்தை வயிரம் ஆன
- சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
- ஏன்பிறந்து திரிகின் றீரே.
- அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை
- பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
- பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
- இனிச்சாகும் பிணங்க ளேநீர்
- கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
- என்னபயன் கண்டீர் சுட்டே
- எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்
- எருவுக்கும் இயலா தன்றே.
- குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
- டால்அதுதான் கொலையாம் என்றே
- வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
- சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
- பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
- சம்மதிக்கும் பேய ரேநீர்
- எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
- கஞ்சுவரே இழுதை யீரே.
- கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
- பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
- பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
- சுடுகின்றீர் புதைக்க நேரீர்
- சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
- துடியாதென் சொல்லீர் நும்மைத்
- தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
- கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.
- பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
- ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
- சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
- பற்பலரும் சித்த சாமி
- உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
- தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
- வரனளிக்கப் புதைத்தநிலை காரோ
- கண்கெட்ட மாட்டி னீரே.
- புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
- கருங்கடலில் போக விட்டீர்
- கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
- சுடுகின்ற கொடுமை நோக்கிக்
- கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
- கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
- தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
- புரிகுவதித் தருணம் தானே.