- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள்
- சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில்
- உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத்
- துள்ளல் ஒழிக தொலைந்து.
- ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
- நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே
- நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம்
- இடம்புரிக வாழ்க இசைந்து.
- சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
- நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
- போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
- நாற்றிசையும் வாழ்க நயந்து.
- அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
- விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
- ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
- நீதிக் கொடிவிளங்க நீண்டு.
- கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
- அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
- நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
- தெல்லோரும் வாழ்க இசைந்து.
- புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
- நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
- செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
- ஒத்தாராய் வாழ்க உவந்து.
- செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
- இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
- சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
- துன்மார்க்கம் போக தொலைந்து.
- செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
- சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
- சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
- என்மார்க்கம் நின்மார்க்க மே.
- நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
- வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும்
- நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற
- சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து.
- ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல்
- சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய
- இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்
- கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்.
- நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
- சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
- பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
- யார்உளர்நீ சற்றே அறை.