- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 - திருச்சிற்றம்பலம்
 - தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
 - தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
 - எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
 - என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
 - வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
 - மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
 - சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
 - நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
 - என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
 - இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
 - முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
 - முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
 - தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
 - மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
 - பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
 - பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
 - துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
 - துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
 - தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
 - உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
 - கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
 - கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
 - நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
 - நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
 - தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
 - யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
 - உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
 - உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
 - துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
 - தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
 - தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
 - எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
 - இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
 - இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
 - மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
 - மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
 - தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
 - கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
 - அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
 - அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
 - இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
 - இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
 - தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
 - அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
 - பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
 - பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
 - நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
 - நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
 - தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
 - யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
 - பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
 - புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
 - மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
 - மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
 - தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 - உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
 - உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
 - இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
 - இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
 - அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
 - அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
 - சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
 - சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.