- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
- மெய்யனை ஐயனை உலக
- மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
- மாணிக்க மணியினை மயில்மேல்
- கால்கொளும் குகனை எந்தையை எனது
- கருத்தனை அயன்அரி அறியாச்
- சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- கண்ணனை அயனை விண்ணவர் கோனைக்
- காக்கவைத் திட்டவேற் கரனைப்
- பண்ணனை அடியர் பாடலுக் கருளும்
- பதியினை மதிகொள்தண் அருளாம்
- வண்ணனை எல்லா வண்ணமும் உடைய
- வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத்
- தண்ணனை எனது கண்ணனை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
- என்னுடைப் பொருளினை எளியேன்
- மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
- மணியினை அணியினை வரத்தை
- மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
- மிளிர்அருள் தருவினை அடியேன்
- தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
- பராபரஞ் சுடரினை எளியேற்
- கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
- எண்ணுதற் கரியபேர் இன்பை
- உரங்கிளர் வானோர்க் கொருதனி முதலை
- ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
- தரங்கிளர் அருண கிரிக்கருள் பவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
- அன்பினுக் கெளிவரும் அரசை
- விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
- விளக்கினை அளக்கரும் பொருளைக்
- கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
- முனிந்திடா தருள்அருட் கடலைத்
- தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- மாரனை எரித்தோன் மகிழ்திரு மகனை
- வாகையம் புயத்தனை வடிவேல்
- தீரனை அழியாச் சீரனை ஞானச்
- செல்வனை வல்வினை நெஞ்சச்
- சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
- சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
- தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
- விமலனை அமலனை அற்பர்
- போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
- பூதனை மாதவர் புகழும்
- பாதனை உமையாள் பாலனை எங்கள்
- பரமனை மகிழ்விக்கும் பரனைத்
- தாதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- குழகனை அழியாக் குமரனை அட்ட
- குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
- அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
- றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
- கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
- காலனை வேலனை மனதில்
- சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- முத்தனை முத்திக் கொருதனி வித்தை
- முதல்வனை முருகனை முக்கண்
- பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
- பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
- சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
- துரியனைத் துரியமும் கடந்த
- சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்
- வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
- கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்
- கருத்தனைக் கருதும்ஆ னந்த
- வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
- விருப்புறு பொருப்பனை வினையைத்
- தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.