- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
- மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
- துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
- மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே.
- ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
- மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
- து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
- ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
- கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
- ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
- மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
- ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
- ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
- துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
- வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
- செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே.
- பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரல் விடுத்துய்யக்
- கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
- ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
- வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.
- எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
- ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
- வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
- அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
- தொண்ட னேன்இன்னும் எத்தனை நாள்செலும் துயர்க்கடல் விடுத்தேற
- அண்ட னேஅண்டர்க் கருள்தரும் பரசிவன் அருளிய பெருவாழ்வே
- கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக் களைந்தருள் களைகண்ணே
- விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில் விளங்கிய வேலோனே.
- வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீந்தக்
- காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே
- தூண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும்
- ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
- மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
- சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
- தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே.