- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
- கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
- புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
- புத்தமுதே ஆனந்த போக மேஉள்
- எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
- என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
- திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
- நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
- நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
- என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
- ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
- பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
- போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
- சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
- காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
- ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
- உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
- இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
- ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
- செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
- என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
- மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
- மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
- இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
- எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
- சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
- கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
- பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
- புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
- உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
- உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
- சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
- நாயகனே வடிவேற்கை நாத னேநான்
- கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
- குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
- சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
- சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
- சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
- கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
- சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
- துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
- அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
- ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
- சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
- பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
- என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
- ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
- மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
- விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
- சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.