- கலி விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
- அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
- இலகுசிற் பரகுக என்று நீறிடில்
- கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே.
- மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
- இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
- தெருளுறு நீற்றினைச் சிவஎன் றுட்கொளில்
- அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.
- வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
- கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
- இல்வினைச் சண்முக என்று நீறிடில்
- நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே.
- கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே
- விடும்புனல் எனத்துயர் விளைக்கும் நெஞ்சமே
- இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில்
- நடுங்கும்அச் சம்நினை நண்ணற் கென்றுமே.
- அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
- என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
- இன்பறாச் சண்முக என்று நீறிடில்
- துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்குமே.
- செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
- அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே
- எறிவிலாச் சண்முக என்று நீறிடில்
- மறிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.
- மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
- வெறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
- நெறிசிவ சண்முக என்று நீறிடில்
- முறிகொளீஇ நின்றஉன் மூடம் தீருமே.
- காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
- மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
- நேயமாம் சண்முக என்று நீறிடில்
- தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.
- சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
- மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
- நிதிசிவ சண்முக என்று நீறிடில்
- வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே.
- பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
- வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
- இசைசிவ சண்முக என்று நீறிடில்
- திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே.