- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
- தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
- காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
- தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்தசை அறும்என்பைக்
- கறிக்கும் நாயினும் கடையநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
- தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
- கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
- தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.